தேடுதல்

எகிப்தியரின் தலைமகன்கள் இறப்பு எகிப்தியரின் தலைமகன்கள் இறப்பு  

தடம் தந்த தகைமை – எகிப்தின் தலைப்பேறுகளைக் கொன்றழித்த கடவுள்

பார்வோனின் தலைமகன் முதல், மாவரைக்கும் கற்களுக்குப்பின் அமர்ந்திருக்கும் அடிமைப் பெண்ணின் தலைமகன் வரை உள்ள முதற்பேறு அனைத்தும், விலங்குகளின் ஆண்பால் தலையீற்று அனைத்தும் இறந்துவிடும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆண்டவர் மோசேயை நோக்கி, “பார்வோன் மேலும் எகிப்தின் மேலும் இன்னும் ஒரு கொள்ளை நோய் வரச்செய்வேன். அவன் உங்களை முற்றிலும் போகவிடுவதோடு இங்கிருந்து உங்களைத் துரத்தி விரட்டி விடுவான். எனவே மக்கள் கேட்கும்படி நான் சொல்வதை அறிவியுங்கள். ஒவ்வொருவரும் தனக்கு அடுத்திருப்பவரிடமிருந்து வெள்ளி அணிகலன்களையும் தங்க அணிகலன்களையும் கேட்டு வாங்கிக் கொள்ளட்டும்” என்றார். எகிப்தியருக்கு இஸ்ரயேல் மக்கள்மேல் நல்லெண்ணம் உண்டாகச் செய்தார் ஆண்டவர். எகிப்து நாட்டில் பார்வோனின் அலுவலர் முன்பும் குடிமக்களின் முன்பும் மிகப் பெரியவராகத் திகழ்ந்த மோசே பின்வருமாறு அவர்களிடம் அறிவித்தார்: “ஆண்டவர் நள்ளிரவு வேளையில் எகிப்தின் நடுவே புறப்பட்டுச் செல்வார். அப்போது எகிப்து நாட்டில், அரியணையில் வீற்றிருக்கும் பார்வோனின் தலைமகன் முதல் மாவரைக்கும் கற்களுக்குப்பின் அமர்ந்திருக்கும் அடிமைப் பெண்ணின் தலைமகன் வரை உள்ள முதற்பேறு அனைத்தும் விலங்குகளின் ஆண்பால் தலையீறு அனைத்தும் இறந்துவிடும். இதுவரை இருந்திராததும் இனி இருக்கப்போகாததுமான பெரும் புலம்பல் எகிப்து நாடெங்கும் கேட்கும்.

இஸ்ரயேல் மக்களில், மனிதர் முதல் விலங்குவரை, எவருக்கும் எதிராக எந்த நாயும் குரைக்காது. இதனால் ஆண்டவர் எகிப்தியரையும் இஸ்ரயேலரையும் வேறுபடுத்திச் செயலாற்றுகிறார் என நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்று கூறினார். பார்வோனும் அவன் பணியாளர்கள் அனைவரும் கடவுளுக்குப் பணிந்து அவர்முன் தலைவணங்கி நின்று, ‛உம்மைப் பின்பற்றும் மக்கள் அனைவரோடும் நீர் இந்நாட்டை விட்டு வெளியேறிவிடும்’ என்று கூறிய பிறகு தான் கடவுள் வெளியேறிச் செல்வார் என்று கூறி பொங்கிய சினத்தோடு மோசே பார்வோனை விட்டகன்றார். அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “பார்வோன் உனக்குச் செவி சாய்க்கமாட்டான். எகிப்து நாட்டில் என் அருஞ்செயல்கள் பெருகிட இது ஏதுவாகும்” என்றுரைத்தார். மோசேயும் ஆரோனும் இவ்வருஞ்செயல்கள் அனைத்தையும் பார்வோன் முன் செய்தனர். ஆண்டவர் பார்வோனின் மனதை இறுகிவிடச் செய்ததால், அவன் இஸ்ரயேல் மக்களைத் தன் நாட்டிலிருந்து போகவிடவில்லை!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2023, 10:55