தேடுதல்

இயேசு நம்மருகில் பயணிப்பதைத் தொடர்கிறார் : திருத்தந்தை

அமைதிக்காகத் தாகம் கொண்ட நம் வறண்ட மனிதகுலத்தின் வேதனையான அழுகைகளை இயேசுவிடம் கொண்டு செல்வோம். நமக்கு அமைதி அருள்பவரான இயேசுவை நம்பிக்கையோடு உற்றுநோக்குவோம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆகஸ்ட் 4, இவ்வெள்ளியன்று, போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்ற  இளையோருக்கான திருச்சிலுவை பாதையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அருளுரை.

அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே! இயேசுவே நமது வாழ்வின் வழியாக இருக்கின்றார் (யோவா 14:6).  நற்செய்திகளில், நாம் அவரை பெரும்பாலும் சாலையில் காண்கிறோம். அவர் ஒருபோதும் வெறுமனே நேரத்தைப் போக்கியவர் அல்ல,  ஆனால் பொதுச்சதுக்கங்கள், ஏரியின் கரைகள், மலைகள், கோவிகள் என எல்லா இடங்களுக்கும் பயணித்துக்கொண்டே இருந்தார். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அதாவது, அவர் எப்படி செயல்பட வேண்டும் என்று எதிர்பார்கிறார்களோ, அதற்கு ஏற்ப இயேசு தன்னை அனுமதிக்கவில்லை; அவரது வார்த்தைகள் மற்றும் செயல்கள் நேரடியானவை மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் உறுதியான எதார்த்ததுடன் பேசுகின்றன.

இயேசுவின் பரிவிரக்கம்

அவர் வெவ்வேறு இடங்களுக்கு நகர்ந்து கொண்டே இருக்கிறார்; அவர் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் அக்கறை காட்டுகிறார்; அவர் துன்பப்படுபவர்களுக்கு முன்பாக நிற்கிறார்,  இன்னும் நம்பிக்கையுடன் தன் பயணத்தைத் தொடர்கிறார். அவர் சோர்வடைந்தவர்கள்மீது பரிவிரக்கம் கொள்கின்றார், அவர் வேதனையின் வலியில் இருப்பவர்களை அணுகுகிறார். அவர் ஒவ்வொரு நபரின் வாழ்க்கைக் கதையைக் கேட்பதற்காகத் தனது பயணத்தை இடையில் நிறுத்துகிறார். மேலும் தனது பயணத்தை மீண்டும் தொடங்குவதற்கு முன் அனைவரையும் இளகிய மனதுடன் கவனித்துக்கொள்கிறார்.

கிறிஸ்து நம் காலடிகளைக் கழுவுமளவிற்கும், நம் காயங்களைக் குணப்படுத்துமளவிற்கும், பணிவுடன் மனிதத்தின் அடித்தளத்தைத் தொடுமளவிற்கும் தன்னையே தாழ்த்திக்கொண்டு நம்மில் ஒருவரானார். அவர் தனது மரணத்தின் பாதையில் தனிமையையும், பயத்தையும், வலியையும், துன்பத்தையும் அனுபவித்தார். இறைத்தந்தையின் ஒரே மகனான இயேசு, நம்மீதுகொண்ட பேரன்பால் நம்மை மீட்பதற்காகக் கல்வாரி மலையில் பலியானார். தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (யோவா 15:13) என்பதை தன் செயல்வழிக் காட்டினார் இயேசு.

உலக இளையோர் தினத்தில் திருச்சிலுவை

உலக இளையோர் தினத்தின் ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் கொண்டுவரப்படும் திருச்சிலுவையானது இந்தப் பயணத்தின் அடையாளமாக அமைகின்றது. இத்திருச்சிலுவை எல்லாவற்றிலும் மிகப் பெரிய அன்பின் புனித அடையாளமாகத் திகழ்கின்றது. இவ்வன்பு, கிறிஸ்து நம் வாழ்க்கையைத் தழுவ விரும்பும் அன்பாகும். திருச்சிலுவை உண்மையான அன்பின் அழகைக் காட்டுகிறது.

இயேசுவின் சிலுவை வழி

அன்பான இளம் நண்பர்களே, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் அழகு, நமது நம்பிக்கையின் பெரிய முரண்பாடு. உங்களுக்கும் எனக்கும், நம் ஒவ்வொருவருக்கும் தன்னை முழுமையாகக் கொடுப்பதுதான் ஒரு அன்பின் அழகு. நம் காயங்களின் தழும்புகளைத் தாங்கி நிற்கும் அன்பின் அழகு அது. அவர் நம்மருகில் பயணிப்பதைத் தொடர்கின்றார். ஒருபோதும் அப்பயணத்தை அவர் நிறுத்துவதில்லை.  நம்மோடு பயணிக்க அவர் ஒருபோதும் தயங்குவதில்லை, அது மதிப்புக்குரியதா என்றுகூட ஒருபோதும் அவர் வியப்படைந்ததில்லை. அவர் நம்மை தன் அன்பினாலும் நம்பிக்கையினாலும் நிரப்புகின்றார்.

இதுவே சிலுவையின் வழி. இவ்வழியில் அவர் பாதிப்புகளையும், துன்ப துயரங்களையும், வேதனை சோதனைகளையும் அவமானங்களையும் இறுதியாக மரணத்தையும் சந்திக்கின்றார். தனது கல்வாரிப் பயணத்தில் இவை அனைத்தையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். இத்தனை துயரங்கள் மத்தியிலும் அவர் தனது பயணத்தின் வேகத்தைக் குறைக்கவில்லை. அவர் உங்கள் ஆன்மாவின் சாளரங்களைத் திறக்க விரும்புகிறார், அவருடைய வாழ்க்கை மற்றும் அன்பின் முழுமையை அனுமதிக்கிறார்; அவர் தனது மென்மையான அன்பினால் வெளிப்படாமலிருக்கும் உங்கள்  கண்ணீரைத் துடைக்க விரும்புகின்றார். அவரது நெருக்கத்தால் உங்கள் தனிமையையும், அவரது ஆறுதலால் உங்கள் பயத்தையும் போக்க விரும்புகிறார்; உங்கள் இதயத்தில் நீங்கள் சுமக்கும் ஒடுக்குமுறையான சுமைகளை நீக்கவும், உங்கள் பாவங்களின் காயங்களைக் குணப்படுத்தவும் அவர் விரும்புகிறார்.

உங்கள் உற்சாகத்தைக் குறைக்கும் துயரம், விரக்தி மற்றும் சோம்பல் ஆகியவற்றிலிருந்து உங்கள் ஆன்மாக்களை விடுவிக்கவும், அன்பின் வழியில் ஏற்படும் ஆபத்துகளை நீக்குவதற்கு உங்களைத் தூண்டவும் அவர் விரும்புகிறார். ஆகவே, இயேசு காட்டும் இவ்வழியில் நீங்களும் தாராள மனப்பான்மை, நம் மத்தியில் உள்ள ஏழைகள் மீது அக்கறை மற்றும் அக்கறையுடன் செலவழித்த வாழ்க்கை, நமது நேரம், நமது சமூகம் மற்றும் படைப்பின் அழகுக்கான பொறுப்பு ஆகியவற்றின் எடுத்துக்காட்டுகளாக மாறலாம்.

இயேசுவுடன் பயணிப்போம்

அவருடன் நாமும் கல்வாரிக்குச் செல்வோம், நமது கனவுகள், ஆசைகள் மற்றும் மகிழ்ச்சிகளை, நமது துன்பங்கள், அச்சங்கள் மற்றும் நம்பிக்கையற்ற அனைத்துச் சூழல்களையும் அவரிடம் கையளிப்போம். நாம் தனிமையாக, நிராகரிக்கப்பட்டதாக, அநீதி இழைக்கப்பட்டதாக உணரும் எல்லா தருணங்களிலும் அவரது கைவிடப்பட்ட அனுபவத்துடன் இணைவோம். அவருடைய திருவுருவத்தை சிறப்பாகப் பிரதிபலிக்கும் ஒரு திருஅவை, மற்றும், மிகவும் நியாயமான, விருந்தோம்பல் மற்றும் உடன்பிறந்த உறவுநிலை கொண்டதொரு உலகத்திற்கான நமது நம்பிக்கைகள் அனைத்தையும் அவரிடம் கொண்டு வருவோம்.

அநீதி, வன்முறை மற்றும் பாகுபாடு, போரின் அனைத்து கொடூரங்கள் மற்றும் ஏழைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது படைப்பில் அவரது கைவினைப்பொருளை அழிக்கும் ஒவ்வொரு வடிவத்தையும் அவரே எடுத்துக் கொள்ளுமாறு அவரிடம் மீண்டும் ஒருமுறை விண்ணப்பிப்போம். அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, நம்முடைய காயங்கள், பலவீனங்கள் மற்றும் நமது தோல்விகளை இயேசு முழுமையாக புரிந்துகொள்கிறார். அவர் எல்லா தீமைகளையும் வலிகளையும் தானே சுமந்துகொண்டார் என்று நாம் நம்புகிறோம், அதனால் இவை மீண்டும் அர்த்தமற்றதாகவோ பொருளற்றதாகவோ இருக்காது.

இயேசுவின் விலாவை உற்றநோக்குவோம்

அமைதிக்காகத் தாகம் கொண்ட நம் வறண்ட மனிதகுலத்தின் வேதனையான அழுகைகளை இயேசுவிடம் கொண்டு செல்வோம். நமக்கு  அமைதி அருள்பவரான இயேசுவை நம்பிக்கையோடு உற்றுநோக்குவோம். ஈட்டியால் குத்தப்பட்ட இயேசுவின் விலாவை நோக்கி நம் இதயங்களைத் திறப்போம். அவர்மீது நம்பிக்கை கொள்வோம். இயேசுவின் விலாவிலிருந்து வடிந்தோடும் இரத்தமும் தண்ணீரும் நம்மைக் கழுவி, புனிதப்படுத்தி, சுத்திகரித்து மாற்றட்டும். இது நம்மை நற்செய்தியின் ஆர்வமுள்ள இறைவாக்கினர்களாகவும் நம்பிக்கையின் துணிவுகொண்ட சாட்சிகளாகவும் ஆக்கட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2023, 13:27