தேடுதல்

விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பீடத்துறை விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பீடத்துறை 

இரக்கத்தின் மூவொரு கடவுளிடமிருந்து வந்த செய்திகளை அங்கீகரிக்கும் திருத்தந்தை

2000-ஆம் ஆண்டில், திருமணமாகி இரண்டு பெண்குழந்தைகளுக்குத் தந்தையான இசை ஆசிரியரும் பாடகர் குழு இயக்குநருமான Gioacchino Genovese என்பவர் தனது அறிவுசார்ந்த காட்சிகள் வழியாக வாழும் மூவொரு கடவுளின் மறைபொருள் பிரசன்னத்தை உணரத் தொடங்கினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இத்தாலியின் Maccio-விலுள்ள திருத்தலத்தில் இடம்பெற்றுவரும் ஆன்மிக அனுபவங்களை அங்கீகரித்து  (nulla osta) திருத்தந்தையால் வழங்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றை கோமோவின் கர்தினால் Oscar Cantoni அவர்களுக்கு அனுப்பியுள்ளது விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பீடத்துறை.

இயற்கைக்கு அப்பாற்பட்டதாகக் கூறப்படும் நிகழ்வுகளைக் கண்டறிவதற்கான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததன் வழியாக, வடக்கு இத்தாலியின் கோமோவிற்கு அருகிலுள்ள Villa Guardia-விலுள்ள Maccio திருத்தலத்தில் இடம்பெற்றுவரும் ஆன்மிக அனுபவங்களுக்கு அனுமதிவழங்கியுள்ளது விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பீடத்துறை.

ஜூலை 24, இப்புதனன்று, கோமோவின் கர்தினால் Oscar Cantoni அவர்களுக்கு, விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் விக்டர் மனுவேல் பெர்னாண்டஸ் அவர்கள் அனுப்பியுள்ள கடிதம் பொதுவில் வெளியிடப்பட்டுள்ளது.

கர்தினால் Oscar Cantoni அவர்கள், புதிய விதிமுறைகளின்படி Maccio-வில் இடம்பெற்றுவரும் ஆன்மிக நிகழ்வுகளுக்கான தடையின்மை சான்றிதழை (nulla osta) அறிவிக்கும் சாத்தியம் குறித்து விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பீடத்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதன்படி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்தக் கடிதத்தில், கர்தினால் பெர்னாண்டஸ் அவர்கள் Genovese-இன்  எழுத்துக்களில் சில விளக்கங்களையும் வழங்கியுள்ளார்.

2000-ஆம் ஆண்டில், திருமணமாகி இரண்டு பெண்குழந்தைகளுக்குத் தந்தையான இசை ஆசிரியரும் பாடகர் குழு இயக்குநருமான Gioacchino Genovese என்பவர் தனது அறிவுசார்ந்த காட்சிகள் வழியாக வாழும் மூவொரு கடவுள் மறைபொருளின் பிரசன்னத்தை உணரத் தொடங்கினார்.

இந்தக் காட்சிகளை எல்லாம் வெளியில் சொல்லி பிரபலத்தைத் தேடிக்கொள்ள விரும்பாது அவற்றை எழுத்துகளாக்கி தனக்குள்ளே வைத்துக்கொண்டார். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இக்காட்சிகள் குறித்து பலருக்கு வெளிப்படுத்தி அவர்களையும் வழிபாடு, இறைவேண்டல்கள் மற்றும் நவநாள்களில் ஈடுபட அழைத்தார்.

Genovese-இன் இந்த எழுத்துக்கள் மற்றும் பொதுவாக நிகழ்வின் ஆரம்ப ஆய்வுக்குப் பிறகு, 2010-ஆம் ஆண்டில் அப்போதைய கோமோ ஆயர், Diego Coletti அவர்கள் அந்தப் பங்குத்தளத்திற்குத் 'தூய்மைமிகு மூவொரு இறைவனின் இரக்கம்' என்ற தலைப்பில் திருத்தலத்திற்கான தகுதிநிலையை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2024, 12:46