தேடுதல்

செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நம்மை மாற்றும் அன்றாட செபம்

செபத்தின் மதிப்பு, தேவை மற்றும் வல்லமையை யூபிலி ஆண்டில் நாம் கண்டறிவதற்காக செப ஆண்டு 2024ஆம் ஆண்டு சிறப்பிக்கப்படுகின்றது – திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அனுதின செபமும் குறிப்பாக திருநற்கருணையும் நம்மை எதிர்நோக்கின் திருப்பயணிகளாக மாற்றுகின்றது என்றும், தந்தைக் கடவுளில் நிலையான முடிவற்ற வாழ்வை நோக்கி நம்மை வழிநடத்துகின்றது என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 19 சனிக்கிழமை ஹேஸ்டாக் செப ஆண்டு என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்றாடம் நாம் செபிக்கின்ற செபமும் குறிப்பாக திருநற்கருணையும் நம்மை எதிர்நோக்கின் திருப்பயணிகளாக மாற்றுகின்றது. கடவுளில் நிலையான மற்றும் முடிவற்ற வாழ்க்கைப் பாதையில் கடவுளின் அன்புப்பிள்ளைகளாகிய நமக்காக அவர் தயாரித்துள்ள திருமண விருந்திற்கு அழைத்துச் செல்கின்றது என்பதே திருத்தந்தையின் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

இறைஅருளின் நிகழ்வான ஜூபிலி ஆண்டில் கடவுள் நம்பிக்கையின் ஆற்றலை அதிகப்படுத்த சிறப்பாக செபிப்போம் என்றும், செபத்தின் மதிப்பு, தேவை மற்றும் வல்லமையை இந்த ஜூபிலி ஆண்டில் நாம் கண்டறிவதற்காக செப ஆண்டு ஆரம்பமாகின்றது என்றும் ஜனவரி 21 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் புனித பேதுரு பேராலய வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய செப உரையின் இறுதியிலேயே எடுத்துரைத்தார் திருத்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட வாழ்க்கை திருஅவை மற்றும் உலக வாழ்வில் செபத்தின் தேவை மற்றும் வல்லமையை உணர கொடுக்கப்பட்ட இந்த செப ஆண்டில் நமக்கு உதவ நற்செய்தி அறிவிப்புப் பேராயம் முன்னிலையில் இருந்து செயற்படும் என்றும் தெரிவித்த திருத்தந்தை, இந்நாள்களில் நாம் குறிப்பாக, கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக செபிப்பது அவசியமாகும் என்றும் வலியுறுத்தினார்.

உக்ரைன், இஸ்ரயேல், பாலஸ்தீனம் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களின் அமைதிக்காக இறைவனை நோக்கி செபிப்பதில் நாம் சோர்வடையக் கூடாது என்றும். பற்றாக்குறையால் பாதிக்கப்படும் பலவீனமானவர்கள், காயமடைந்த மற்றும் கொல்லப்பட்ட சிறார், உணர்வுகள், கனவுகள், மற்றும் எதிர்காலத்தை இழந்தவர்கள் என அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு அமைதி கிடைக்க செபிக்க வேண்டியது நமது பொறுப்பு என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2024, 15:46