இனியது இயற்கை – வானம் தொட்டுவிடும் தூரம் அல்ல!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நான் சிறுவனாக இருந்தபோது எனது நண்பர்களுடன் சேர்ந்து கடவுளின் உயரியப் படைப்பான இந்த வானத்தைப் பார்த்து அதிசயித்துப் போனதுண்டு. சில நேரங்களில் நானும் எனது நண்பர்களும் தூரத்தில் இறங்கி நிற்கும் வானத்தைத் தொட்டுவிட வேண்டும் என்றெண்ணி நீண்ட பயணம் செய்த அனுபவமும் உண்டு. ‘என்னடா இது? போகப் போகப் போய்கிட்டே இருக்கு...’ என்று கூறி மிகவும் தளர்ந்துபோன மனதுடன் திரும்பி வந்ததும் உண்டு. ‘வானம் தொட்டுவிடும் தூரம்தான்’ என்ற தலைப்பில் நூல்கள் கூட உள்ளன. ஆனால், நாம் வானத்தைத் தொட முடியாது என்பதே பேருண்மை. அதனால்தான், கடவுளின் அன்பு வானத்தைப்போல நீளமானது என்றும், நாமும் அந்த வானத்தைப்போல மிகப்பெரிய மனம் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றோம்.
ஒரு பெரிய காட்டில் வாழும் ஒரு சிறிய எறும்புக்கு இந்தக் காடு எவ்வளவு பெரியது என்பதே தெரியாது. அந்தக் காட்டில் தினம் தினம் நடமாடும் மற்ற உயிரினங்கள் மற்றும் மனிதரின் நடவடிக்கைகள் போன்ற எதையுமே புரிந்து கொள்ளும் அளவிற்கோ, அல்லது ஏதேனும் ஒருவர் அந்த எறும்புக்கு விளக்கி கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கோ போதிய அறிவு அந்த எறும்புக்குக் கிடையாது. அது போல தான் நாமும் இந்த வானத்தைப் புரிந்துகொள்ள முயல்வது. ஆகவே, வானத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதைக் காட்டிலும் அது நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்