அமைதியைப் பெற சுயசிந்தனை மற்றும் மன்னிப்பு தேவை
மெரினா ராஜ் - வத்திக்கான்
உண்மையான மன்னிப்பு, நல்லிணக்கம், சுய சிந்தனை ஆகியவை வரலாற்றில் இது வரை இல்லாத அளவிற்கு அமைதியைப் பெற தேவை என்று வலியுறுத்தியுள்ளார் தென் கொரியப் பேராயர் Peter Chung
நவம்பர் 26 சனிக்கிழமை தென் கொரிய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நல்லிணக்க மன்றத்தில், பங்கேற்றுப் பேசிய Pyongyang திருத்தூது நிர்வாகியும் சியோலின் பேராயருமான பீட்டர் சுங் அவர்கள், கொரிய தீபகற்பத்தில் அதிகரித்துவரும் பதட்டநிலைகளுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதோடு, அமைதிக்குத் தேவையான கூறுகளைக் குறிப்பிட்டுள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் அமைதி, விழிப்புணர்வு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு தலத்திருஅவையின் பங்கு என்ற கருப்பொருளில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேராயர் சுங் அவர்கள், எந்தவொரு தனிப்பட்ட ஆர்வமும், அரசியல் உறவும் மதங்களுக்கிடையேயான உரையாடல் மற்றும் பரிமாற்றங்களைத் தடை செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
கொரிய தீபகற்பம் முழுவதும் நல்லிணக்கம், செழுமைக்கான செயல்முறைகள், மற்றும், கொரியாவின் ஆழ்ந்த விருப்பங்களுக்கு ஆதரவளிக்க திருப்பீடம் தவறுவதில்லை எனவும் எடுத்துரைத்தார், தென் கொரியத் திருப்பீடத் தூதர் பேராயர் Alfred Xuereb.
கஜகஸ்தானில் நடந்த மதத் தலைவர்களின் மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்திய கருத்துக்களான, அமைதி, உடன்பிறந்த உறவில் உருவாகி, அநீதி மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தில் வளர்ந்து, பிறரைச் சென்றடைவதன் வழியாக,க் கட்டமைக்கப்படுகின்றது என்பதையும் எடுத்துக் கூறினார் பேராயர் சூரெப்.
கொரிய தீபகற்ப அமைதி-பகிர்வு மன்றம்
2016ஆம் ஆண்டு முதல் கத்தோலிக்க தலத்திருஅவையினரால் தென் கொரியத் தலைநகரில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இக்கூட்டமானது, உலகெங்கிலும் உள்ள அருள்பணியாளார்கள், அமைதி ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்களை ஒன்றிணைத்து, பிளவுபட்ட கொரிய தீபகற்பத்தில் அமைதியின் பாதையை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படுகின்றது.
தென் கொரிய மற்றும் அமெரிக்க கடற்படைகள் மீண்டும் கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தியும், வட கொரியா அதிக ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டும்வரும் சூழலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பன்னாட்டு சூழ்நிலை, மற்றும் கொரிய தீபகற்பத்தில் நீடித்த அமைதி மலருவது பற்றியும் வலியுறுத்தப்பட்டது.(AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்