இந்தியாவில் காற்று மாசு இந்தியாவில் காற்று மாசு  

இனியது இயற்கை – ஆயுள்காலத்தைக் குறைக்கும் காற்று மாசு!

தொழில்துறை, பொருளாதார வளர்ச்சி, மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவை காற்று மாசு அதிகரிக்க அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காற்று மாசுபாடு காரணமாக இந்திய மக்களின் ஆயுள்காலம் சராசரியாக ஐந்து ஆண்டுகள் வரை குறையக்கூடும் என்று அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, டெல்லியில் வசிப்பவர்களின் ஆயுள்காலம் பத்து ஆண்டுகள் வரை குறையும் என சிகாகோ பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும்,  உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளைவிட, டெல்லியில் காற்று மாசு 21 மடங்கு அதிகமாக உள்ளது என்றும், இந்தியாவில் தனி மனித உடல்நலனுக்கு காற்று மாசு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உலகச் சுகாதார அமைப்பின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் இந்திய குடிமக்கள் தங்கள் ஆயுள்காலத்தில் ஐந்து ஆண்டுகளை இழக்க நேரிடும் என்றும் அப்பல்கலைக் கழகம் எச்சரித்துள்ளது. அதிக துகள் மாசு செறிவு மற்றும் அதிக மக்கள் தொகை காரணமாக இந்தியா காற்று மாசு தொடர்பான அதிகமான சுகாதாரப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாகவும் கடந்த 2013 முதல் உலக அளவில் காற்று மாசு ஏறத்தாழ 44 விழுக்காடு அதிகரிப்பதற்கு இந்தியா காரணமாக உள்ளது என்றும் அவ்வாய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழில்துறை, பொருளாதார வளர்ச்சி, மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவை கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் காற்று மாசு அதிகரிக்க அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2022, 11:32