தேடுதல்

Cookie Policy
The portal Vatican News uses technical or similar cookies to make navigation easier and guarantee the use of the services. Furthermore, technical and analysis cookies from third parties may be used. If you want to know more click here. By closing this banner you consent to the use of cookies.
I AGREE
இலத்தீனில் காலை திருப்புகழ்மாலை
நிகழ்ச்சிகள் ஒலியோடை

மறைக்கல்வியுரை - மறை நூல் முழுவதும் இறைவனால் தூண்டப்பெற்றது

புனித விவிலியத்தின் ஆன்மீக வாசிப்பால் திருஅவை ஊட்டம் பெறுகிறது. விவிலியத்தை தூய ஆவியாரின் வழிகாட்டுதலின்படி வாசிக்கும்போது ஊட்டம் பெறுகிறோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஐரோப்பாவில் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் சிறிதளவு அதிகமாகிக் கொண்டேச் சென்றாலும், அவ்வப்போது உரோம் நகரில் சிறிது தூறல் தூவி வெப்பத்தை ஓரளவுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது காலநிலை என்று கூறலாம். இப்புதனன்று வெப்பம் சிறிது மிதமாக இருக்க, திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்திலேயே இடம்பெற்றது, பல ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் திருத்தந்தையின் வருகைக்காக காத்திருக்க,  ஏறக்குறைய 8.45 மணிக்கு அவ்வாளகம் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு குழுமியிருந்த மக்களிடையே காரில் வலம் வந்து, சிறு குழந்தைகளை கையில் பெற்று ஆசீர் அளித்தார். பின்னர், முகப்பில் இருந்த மேடைக்குச் சென்ற திருத்தந்தை, “தூய ஆவியாரும் மணப்பெண்ணும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்திச் செல்பவர் தூய ஆவி” என்ற மறைக்கல்வித் தொடரின் மூன்றாவது பகுதியாக, ஜூன் 12ஆம் தேதி புதன்கிழமையன்று,  “மறை நூல் முழுவதும் இறைவனால் தூண்டப்பெற்றது. இறைவார்த்தையிலிருந்து இறையன்பை தெரிந்துகொள்ளல்”  என்ற தலைப்பில் தன் எண்ணங்களை அங்கு குழுமியிருந்தோரிடம் பகிர்ந்துகொண்டார். முதலில் புனித பேதுரு எழுதிய திருமடலிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.

ஆனால், மறைநூலிலுள்ள எந்த இறைவாக்கும் எவரது சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டது அல்ல என்பதை நீங்கள் முதலில் அறியவேண்டும். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள் அருளியதை உரைத்ததே இறைவாக்கு. அது ஒருபோதும் மனித விருப்பத்தால் உண்டானது அல்ல ( 2 பேதுரு 1,20-21).

இந்த வாசகம் பல மொழிகளில் வாசிக்கப்பட, திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வு துவங்கியது.

அன்பு சகோதரர் சகோதரிகளே, காலை வணக்கம். நம் நம்பிக்கையாம் கிறிஸ்துவை நோக்கி திருஅவையை வழிநடத்தும் தூய ஆவியார் குறித்த நம் மறைக்கல்வி உரையைத் தொடர்வோம். படைப்பில் தூய ஆவியாரின் செயல்பாடு குறித்து கடந்த வாரம் நம் மறைக்கல்வி போதனையில் கண்டோம். இவ்வாரம்,   இதனை அருள்வெளிப்பாட்டில் காண்போம். அந்த வெளிப்பாட்டில்தான் மறைநூல் இறைவனால் தூண்டப்பட்டது மற்றும் அதிகாரம் மிக்கது என்பதன் சான்றைப் பார்க்கிறோம். புனித பவுல் திமொத்தியுவுக்கு எழுதிய இரண்டாவது மடலில், “மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது” (3:16) என்ற வார்த்தைகளைக் காண்கிறோம். மேலும், புதிய ஏற்பாட்டின் பிறிதொரு பகுதியில், “தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள் அருளியதை உரைத்தனர்” (2 பேது 1:21) எனவும் வாசிக்கிறோம். விவிலியம் தெய்வீகத் தூண்டுதல் பெற்றது என்பது திருஅவைக் கோட்பாடு.  இதைத்தான் நாம் நம் நம்பிக்கை அறிக்கையில், “இறைவாக்கினர்கள் வழியாக இறைவன் பேசினார்” என அறிக்கையிடுகிறோம். விவிலியத்திற்கு தூண்டுதலாக இருந்த தூய ஆவியார் அவரே விவிலியத்திற்கு விளக்கமளிப்பவராகவும், அவற்றை வற்றாது நீடித்து நிலைத்து வாழ்வதாகவும், செயல்பாடுடையதாகவும் மாற்றுகிறவராகவும் இருக்கிறார். தூண்டுதல் பெற்ற ஒன்றை  தூண்டுதல் தரும் ஒன்றாகவும் ஆக்குகிறார். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் இறை வெளிப்பாடு பற்றிய கோட்பாட்டு விளக்கம் எடுத்துரைப்பதுபோல், “விவிலிய நூல்கள் கடவுளால் ஏவப்பட்டு எக்காலத்திற்குமென எழுதப்பட்டுள்ளதால் அதே கடவுளின் வார்த்தையை ஒரு மாற்றமும் இன்றி அளிப்பதுடன் இறைவாக்கினர்கள், திருத்தூதர்கள் ஆகியோரின் சொற்கள் வழியே தூய ஆவியாரின் குரலை எதிரொலிக்கச் செய்கின்றன (21). இதன் வழியாக, “மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்” (லூக் 24:45) என இயேசு தன் சீடர்களுக்கு ஆற்றியதை  திருஅவையில் தூய ஆவியார் தொடர்ந்துச் செய்கிறார்.

நாம் விவிலியத்தின் ஒரு சிலப் பகுதிகளை எந்தவித உணர்வுமின்றி பலமுறை வாசித்திருக்கலாம், ஒருமுறை அதனை விசுவாசம் மற்றும் இறைவேண்டல் சூழலில் வாசிக்கும்போது அந்த பகுதி ஒளியூட்டப்பட்டதாக, நாம் வாழும் சூழல்களின் பிரச்சனைகளை நமக்கு எடுத்துரைத்து, இறைவிருப்பத்தை நமக்குத் தெளிவுபடுத்துவதாக உள்ளது.   தூய ஆவியாரினால் இது ஒளியூட்டப்படவில்லையெனில், வேறு யாரால் இந்த மாற்றம் இடம்பெறுகிறது? தூய ஆவியின் செயல்பாட்டால் விவிலிய வார்த்தைகள் ஒளியூட்டம் பெறுகின்றன. புனித பவுல் எபிரேயருக்கு எழுதிய திருமடலில் கூறும், “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது(4:12) என்ற வார்த்தைகள் எவ்வளவு உண்மையானது என்பதை இத்தகைய சூழல்களில் நாம் உணர்கிறோம்.

புனித விவிலியத்தின் ஆன்மீக வாசிப்பால் திருஅவை ஊட்டம் பெறுகிறது. தூய ஆவியாரால் தூண்டுதல் பெற்ற விவிலியத்தை அதே தூய ஆவியாரின் வழிகாட்டுதலின்படி வாசிக்கும்போது ஊட்டம் பெறுகிறோம்.  இதன் மையமாக, அனைத்தையும் ஒளிர்விக்கும் ஒளிவழிகாட்டியாக, இம்மீட்புத்திட்டத்தை நிறைவேற்றும் இயேசுவின் மரணமும் உயிர்ப்பும் நிற்கின்றன. இதுவே அனைத்து இறைவாக்குகளையும் நிறைவேற்றி மறைந்திருக்கும் மறையுண்மைகளை வெளிப்படுத்தி விவிலியம் முழுவதையும் வாசிப்பதற்கு உதவும் சாவியை வழங்குகிறது. ஏழு முத்திரை பொறிக்கப் பெற்று மூடப்பட்டிருந்தது” (தி.வெ. 5:1-9), என கூறப்பட்டிருக்கும் முத்திரைகளை உடைத்த ஆட்டுக்குட்டி குறித்து திருவெளிப்பாட்டு நூலில் வாசிக்கிறோம். இயேசுவின் மணமகளாம் திருஅவை, தூண்டுதல் பெற்ற ஏடுகளின் அதிகாரம்பெற்ற விளக்கவுரையாளர், மற்றும் அதனை அப்படியே உரக்க எடுத்துரைக்கும் உரிமை பெற்றுள்ளது. திருஅவை தூயஆவியாரை கொடையாகப் பெற்றுள்ளமையால்,  “திருஅவை உண்மைக்குத் தூணும் அடித்தளமுமாய் இருக்கிறது(1 திமெ 3:15). விசுவாசிகளுக்கும் விவிலியத்தை சரியான முறையில் விளக்க விரும்புவோர்க்கும் உதவ வேண்டிய பணி திருஅவைக்கு உள்ளது. வார்த்தை வழிபாட்டில், குறிப்பாக, திருப்பலியின் வாசகங்களில் நாம் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளவைகள் எவ்வாறு புதிய ஏற்பாட்டில் தன் முழு வெளிப்பாட்டைக் கொண்டுள்ளன என்பதை அறிய வருகிறோம். இங்கு விவிலியத்தில் காணப்படும் வார்த்தைகள் வாழ்வாக மாற்றம் பெற, மறையுரைகள் உதவ வேண்டும். நாம் விவிலியத்தில் வாசிக்கும் பல வாசகங்களில் ஏதாவது ஒன்று நமக்குரியதாக இருக்கும். அதனை நாம் வரவேற்கும்போது, அது நம் நாளை ஒளியூட்டுவதுடன், நம் இறைவேண்டலுக்கும் தூண்டுதலாக இருக்க முடியும்.

இறைவார்த்தையை அன்புகூர்வதற்கு உதவும் சிந்தனையுடன் இன்றைய நம் மறைக்கல்விப் போதனையை நிறைவுச் செய்வோம். ஓர் இசையைப்போல், விவிலியமும் துவக்கத்திலிருந்து இறுதிவரை இறையன்பை தன் அடிப்படை சுரமாகக் கொண்டுள்ளது. புனித அகுஸ்தீனார் கூறுவதுபோல், விவிலியம் முழுவதும் இறையன்பைத் தவிர வேறு எதையும் கூறவில்லை. புனித பெரிய கிரகரியும், விவிலியம் என்பது படைத்தவரால் தன் படைப்புகளுக்கு எழுதப்பட்ட ஒரு கடிதம், அதாவது, மணமகனால் மணமகளுக்கு எழுதப்பட்டது என குறிப்பிட்டு, இறைவார்த்தையில் இறைவனின் இதயத்தைக் கற்றுக் கொள்வோம் என்பதை வலியுறுத்துகிறார்.  இவ்வெளிப்பாட்டின் வழியாகக் கட்புலனாகாக் கடவுள் தம் அன்பின் மிகுதியால், மக்களைத் தம்மோடு உறவுகொள்ள அழைத்து, அவர்களோடு உறவு ஏற்படுத்துமாறு அவர்களைத்தம் நண்பர்களாகக் கொண்டு உரையாடுகிறவர்களோடு குடிகொள்கிறார் (இறை வெளிப்பாடு, 2) என இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு உரைக்கிறது.

விவிலியத்திற்கு தூண்டுதலாக இருந்ததுடன், அதிலிருந்து சுவாசிக்கும் தூய ஆவியார், நம் வாழ்வின் சூழல்களிலிருந்து இறையன்பை உணர்ந்து ஏற்றுக்கொள்ள உதவுவாராக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 ஜூன் 2024, 08:53

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >
Prev
February 2025
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
232425262728 
Next
March 2025
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031