தேடுதல்

Cookie Policy
The portal Vatican News uses technical or similar cookies to make navigation easier and guarantee the use of the services. Furthermore, technical and analysis cookies from third parties may be used. If you want to know more click here. By closing this banner you consent to the use of cookies.
I AGREE

புதன் மறைக்கல்வி உரை – அன்னை மரியாவும் தூய ஆவியாரும்

நவம்பர் 13 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு "வாழும் தூய ஆவியால் எழுதப்பட்ட ஓர் கடிதம் - அன்னை மரியாவும் தூய ஆவியாரும் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நவம்பர் 13 புதன்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரையும் கரமசைத்து வாழ்த்தியபடியே திறந்த காரில் வலம்வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். வழக்கமாக புதன் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தை துவக்கினார். அதன்பின் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எருசலேமில் சான்று பகர்தல் என்னும் தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

திருத்தூதர் பணிகள் 1: 12 - 14

சீடர்கள் ஒலிவமலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது. பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள்.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ‘தூய ஆவியாரும் மணமகளும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்தும் தூய ஆவியார்’ என்ற தலைப்பின் 13ஆம் பகுதியாக அன்னை மரியாவும் தூய ஆவியாரும் என்ற தலைப்பின் தனது கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு வழங்கினார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

திருஅவையில் தூய ஆவியாரின் வெவ்வேறு பணிகளில் கடவுளின் வார்த்தை, திருவருளடையாளங்கள், செபங்கள் போன்றவற்றில் மிகவும் முக்கியமான ஒன்று மரியன்னை பக்தி. கத்தோலிக்க இறையியலாளர்கள் Ad Iesum per Mariam அதாவது அன்னை மரியா வழியாக இயேசுவிற்கு என்று புதிய அர்த்தத்தைக் கொடுக்க முயல்கின்றார்கள். நமக்கும் கிறிஸ்துவுக்கும் இடையே உள்ள உண்மையான ஓர் இணைப்பாளராக இருப்பவர் தூய ஆவியார். நம்மை இயேசுவிடம் கொண்டுசேர்க்க தூய ஆவியார் பயன்படுத்தும் வழிகளில் ஒன்று அன்னை மரியா. அன்னை மரியா இயேசுவைப் பார்க்க உதவுகின்றார். நமது இதயத்தைத் திறக்க உதவுகின்றார். தன்னை அல்ல மாறாக இயேசுவை வெளிப்படுத்தி அவரைப் பார்க்க, அவரை அடைய வழி வகுக்கின்றார்.

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமடலில், எங்கள் பணியின் வாயிலாகக் கிறிஸ்து எழுதிய கடிதம் நீங்களே என்பது வெளிப்படை. அது மையினால் எழுதப்பட்டது அல்ல; மாறாக வாழும் கடவுளின் ஆவியால் எழுதப்பட்டது. கற்பலகையில் அல்ல, மாறாக மனித இதயமாகிய பலகையில் எழுதப்பட்டது என்று கூறுகின்றார். ஆக திருஅவையின் முதல் சீடராகவும், நபராகவும் உயிருள்ள கடவுளின் ஆவியுடன் எழுதப்பட்ட கடிதமாக அன்னை மரியா விளங்குகின்றார். யாவரும் வாசித்து அறிந்து கொள்ளும் முறையில் இதயத்தில் எழுதப்பட்ட கடிதமாக அன்னை மரியா விளங்குகின்றார்.

கபிரியேல் வானதூதரின் மங்கள வார்த்தை அறிவிப்புக்குப் பின் "அப்படியே ஆகட்டும், உமது அடிமை என்பதற்கு ஓரிஜென் என்பவர் இவ்வாறு தனது கருத்துக்களைத் தெரிவிக்கின்றார். அதாவது அன்னை மரியா கடவுளின் தூதரிடம் இதோ நான் இருக்கின்றேன். நான் ஓர் எழுதுபலகை. கடவுள் விரும்புவதை என்னில் எழுதட்டும் என்று கூறுகின்றார். மனிதர்களால் உருவாக்கப்பட்ட எழுதுபலகையினை அக்காலத்தில் பயன்படுத்துவர். எனவே எழுதுபலகையாக தன்னைக் குறிப்பிடுகின்றார் அன்னை மரியா. இக்காலத்தில் அன்னை மரியாவை எழுதப்படாத புதிய வெள்ளைத்தாள் என்று குறிப்பிடலாம்.

கடவுளின் தாய் மரியா தூய ஆவியாரின் தூய செயலுக்கு ஒரு கருவியாக தன்னை அர்ப்பணிக்கின்றார். இரண்டு மிக எளிய வார்த்தைகளை அன்னை மரியா நமக்கு பரிந்துரைக்கிறார் "இதோ நான் இருக்கிறேன்" மற்றும் “ஆகட்டும்”. கடவுளுக்கு "ஆம்" என்று சொன்னவர் மரியா, மேலும் அவருடைய முன்மாதிரி மற்றும் பரிந்துரையின் வழியாக, நாம் செயல்படுத்த வேண்டிய கீழ்ப்படிதலை அல்லது நாம் எதிர்கொள்ளவேண்டிய சவால்களை சந்திக்கும்போதெல்லாம், இறைவனிடம் "ஆகட்டும்" என்று சொல்லும்படி அவர் நம்மைத் தூண்டுகிறார்.

வரலாற்றில் எல்லா நேரங்களிலும், குறிப்பாக இந்த நேரத்தில், எல்லா நாடுகளுக்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும், “மேலிருந்து வரும் ஆற்றல்” அதனைச் செய்ய நமக்கு உதவக் காத்திருக்கிறது. திருத்தூதர் பணிகள் நூலில் காண்கின்றபடி, சீடர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடவேண்டாம்.

அந்த அறையில் அன்னை மரியாவுடன் மற்ற பெண்களும் இருந்தனர் என்பது உண்மைதான், ஆனால் மரியாவின் இருப்பு அவர்கள் அனைவருக்கும் வித்தியாசமானது மற்றும் தனித்துவமானது. அன்னை மரியாவுக்கும் தூய ஆவியாருக்கும் இடையே ஒரு தனித்துவமான மற்றும் நிலையான அழிக்க முடியாத பிணைப்பு உள்ளது, அது "தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியிடம் பிறந்தார்"  என்று நம்பிக்கை அறிக்கையில் நாம் கூறுவதுபோல கிறிஸ்துவின் தனிப்பட்ட நபர் என்ற உறவு அன்னை மரியாவிற்கு இருக்கின்றது. நற்செய்தியாளர் லூக்கா, மங்கள அறிவிப்பின் போது மரியாவிடம் தூய ஆவியானவர் வருதல், பெந்தக்கோஸ்து நாளில் சீடர்கள் மீது தூய ஆவியார் வருதல் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள சில ஒத்த வெளிப்பாடுகளை வெளிப்படுத்த இந்நிகழ்வுகளை பதிவிட்டுள்ளார்.

பிரான்சிஸ் அசிசியார், தனது செபங்களில் ஒன்றில், கன்னிமரியாவை விண்ணகத்தந்தையின் மகள், இறைமைந்தனின் தாய், தூய ஆவியாரின் மணமகள் என்று எடுத்துரைக்கின்றார். தந்தையின் மகள், மகனின் தாய், தூய ஆவியாரின் மணமகள்! என்னும் தமத்திரித்துவத்துடனான அன்னை மரியின் தனித்துவமான உறவை எளிய வார்த்தைகளால் விளக்க முடியாது.

தூயஆவியின் மணமகளாம் அன்னை மரியா என்னும் மிகவும் அழகான உண்மை அதன் வார்த்தைகளுக்கேற்ப உண்மையான புரிதலில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மணமகள் என்பதற்கு முன், தூயஆவியின் சீடர் அன்னை மரியா. ஆவியானவரின் தூண்டுதலுக்கு கீழ்ப்படிவதை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம், குறிப்பாக கபிரியேல் வானதூதர் அவரை விட்டு வெளியேறியவுடன் மரியா புறப்பட்டு விரைந்து எலிசபெத்துக்கு உதவச் சென்றது போல நாமும் அவர்போலச் செயல்பட வலியுறுத்துகின்றார்.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார். இத்தாலி, உரோம் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், போரினால் துன்புறும் மக்களுக்காக செபிக்க வலியுறுத்தினார்.

பாலஸ்தீனம், இஸ்ரயேல், உக்ரைன், மியான்மார் பகுதி மக்களுக்காக செபிப்போம் அமைதியின் தேவை இக்காலத்தில் மிக அதிகமாக உள்ளது. எனவே அமைதிக்காக செபிப்போம் என்று கூறி தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இறுதியாக விண்ணகத் தந்தையை நோக்கிய செபமானது இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து கூடியிருந்த மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

     

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 நவம்பர் 2024, 08:32

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >
Prev
March 2025
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Next
April 2025
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930